Powered By Blogger

Saturday, November 19, 2016

தமிழ் உரைநடையின் வளர்ச்சி ஒரு பார்வை



முன்னுரை
  
நம்முடைய தாய்த் தமிழை முத்தமிழ் என்று வழங்கினர் நம் முன்னோர். இயற்றமிழ், இசைத்தமிழ், நாடகத்தமிழ் என்பன முத்தமிழ்ப்  பிரிவுகள் ஆகும். இயற்றமிழ் என்பது உரைநடையும் செய்யுளுமாகிய இரண்டு   நிலைகளிலும்   வளர்ந்து வருகிறது. தொடக்கத்தில் செய்யுள் வடிவிலேயே தமிழ் இலக்கியம் செல்வாக்குப் பெற்றிருந்தது.“உரைநடை என்பது வளர்ந்தது பிற்காலத்திலேயே ஆகும். உரைநடை வளர்ந்த பிறகு வரலாறு, சமயம், மருத்துவம் முதலான துறைகள் உரைநடையிலேயே எழுதப்படலாயின. அதன் பிறகே நாடகம், கதை முதலியனவும் பாட்டில் இருந்து உரைநடை வடிவம் பெற்றன.” என்று தெளிவாக விளக்குகிறார் டாக்டர் மு.வ (இலக்கிய மரபு பக் 1,2)
            தொல்காப்பியர் அக்கால இலக்கியத்தை ஏழு வகைப்படுத்தினார்.
“பாட்டிடை வைத்த  குறிப்பி  னானும்
                  பாவின்று எழுந்த கிளவியானும்
                         பொருளொடு புணராப் பொய்ம்மொழியானும்
                         பொருளொடு புணர்ந்த நகைமொழியானும்
                         உரைவகை நடையே நான்கு என மொழிப ”
                                                  (தொல் – செய்யுளியல் – 171)

            கட்டுரை, கதை, நகைச்சுவை இவற்றிற்கு உரைநடை பயன்படுத்தபட்டது. தொல்காப்பியர் குறிப்பிடும் உரைவகை நடை என்ற தொடரே பின்னாளில் உரைநடை என வழங்கலாயிற்று.

முதல் உரைநடை
               சங்கம் மருவிய காலத்தில் சேரன் தம்பி இளங்கோவடிகள் இசைத்த சிலப்பதிகாரத்தை  “ உரையிடையிட்ட பாட்டுடைச்  செய்யுள் ”  என்பர்.   ஆனால் தொடர்ந்த உரைநடையை அதில் நாம் காண முடியாது. கி.பி. 8 –ஆம் நூற்றாண்டில் தோன்றிய இறையனார் களவியல் உரையில் தான் தெளிந்த உரைநடையைக் காண முடிகிறது.
உரையாசிரியர்கள்
             இறையனார் களவியல் உரை தோற்றம் பெற்ற பின்னர் கி.பி. 10-ஆம் நூற்றாண்டு முதல் 15 - ஆம் நூற்றாண்டு  வரை  உரையாசிரியர்களின்  காலமாக விளங்கியது. தொல்காப்பியம் போன்ற இலக்கண நூல்களுக்கும்,பத்துப்பாட்டு போன்ற இலக்கிய நூல்களுக்கும் அவர்கள் உரை எழுதினர். இளம்பூரணர், பேராசிரியர், உச்சி மேல் புலவர் கொள் நச்சினார்க்கினியர், பரிமேலழகர், சேனாவரையர் முதலியோர் உரைநடை   வளர்ச்சிக்கு ஆற்றிய   பணியை தமிழுலகம் என்றென்றும் மறவாது. சமணர்களும். வைணவர்களும் மணிப்பிரவாளம் எனப்படும் பிறமொழிக் கலப்புடன் தமிழில் உரைநடை எழுதினர்.
 கல்வெட்டு வளர்த்த உரைநடை
               தமிழ் உரைநடை வளர்ச்சியில்   கல்வெட்டுகளுக்கும் பெரும் பங்கு உண்டு. இனிய உரைநடையில் அமைந்த சோழர் காலத்துக் கல்வெட்டுக்கள் பிற்கால உரைநடை வளர்ச்சிக்குப்  பெரிதும் உதவி   செய்தன   என்றாலும்   கல்தச்சர்கள் தமிழறிவு பெரிதும் வாய்க்கப் பெறாதவர்களாக இருந்தமை காரணமாக அவர்கள் கல்லில் பொறித்த உரைநடை பெரும்பாலும் பிழை நிறைந்ததாக  உள்ளது. அதை உரைநடை வளர்ச்சிக்கு அளவுகோலாக கொள்ள இயலாது என்கிறார் பெரியசாமி தூரன்(முன்னுரை பாரதி தமிழ் வசனத் திரட்டு)

18 –ஆம் நூற்றாண்டு முதல் இன்று வரை 
                        ஐரோப்பியரின் வருகைக்குப் பின் உரைநடைத் தமிழுக்குச் செல்வாக்குப் பெருகியது. மத போதகர்களின் வசன நூல்கள் வெளிவரத் தொடங்கின. வீரமாமுனிவர் அவி வேக பூரண குரு கதை  (பரமார்த்த குரு கதை) வேதியர் ஒழுக்கம் ஆகிய உரைநடை நூல்களை எழுதினார்.  சிவஞான போதத்தை விளக்கும் திராவிட மகா பாடியம் என்ற நூலை இயற்றினார் சிவஞான முனிவர். “வசனநடை கை வந்த வல்லாளர்” ஆறுமுகநாவலர் தெளிவான உரைநடைக்கு முதலில் வழி காட்டியவர். இவரது நல்ல உரைநடைக்கு எடுத்துக்காட்டாக விளங்குபவை “பெரிய புராண வசனம்”  , “திருவிளையாடல் புராண வசனம்”,    “கந்தபுராண வசனம்” முதலியவை. திருவருட்பிரகாச வள்ளலார் “மனுமுறை கண்ட வாசகம்”, “ஜீவ காருண்யம்” முதலான   உரைநடை   நூல்களை எழுதி உள்ளார். இருபதாம் நூற்றாண்டு தொடங்கிய பின்னர் பல துறைகளையும் தழுவி தமிழில் உரைநடை நூல்கள் வெளிவரலாயின. மறைமலைஅடிகள் தனித்தமிழிலும், திரு.வி.க அழகு தமிழிலும் நூல்களைப் படைத்து தமிழ் உரைநடைக்குப் புத்துயிர் ஊட்டினர். தமிழ்த்தாத்தா டாக்டர் உ.வே.சாமிநாத அய்யர் எளிய, இனிய நடையில் என் சரித்திரம், நினைவு மஞ்சரி போன்ற உரைநடைச் செல்வங்களை தமிழுலகிற்கு வழங்கினார். மோனைச் சிறப்புடன் அடுக்கு மொழியாகத் தமிழைக் கையாண்டவர் டாக்டர் ரா.பி.சேதுப்பிள்ளை. அவரது படைப்புக்களில் “தமிழ் இன்பம்”, “ஊரும் பேரும்”  போன்ற உரைநடை நூல்கள் படிக்கப் படிக்க இன்பம் தருவன.சிந்தனையைத் தூண்டு வன. பண்டிதமணி கதிரேசச்செட்டியார், நாவலர்  சோமசுந்தர பாரதியார், ந.மு.
வேங்கடசாமி நாட்டார்,   தெ.பொ.மீ கா.அப்பாத்துரையார் முதலியவர்கள் தமிழில் உயர்நடையைக் கையாண்டு செறிவுள்ள உரைநடை நூல்களை இயற்றி இருக்கிறார்கள். மகாகவி பாரதியார் சிறுசிறு தொடர்களைக் கையாண்டு தமிழ் உரைநடையில் புதுமையைப் புகுத்தினார்.   

நாவல் - சிறுகதை 
                           முதன்முதலாகத் தமிழுக்கு நாவல் இலக்கியத்தை அளித்தவர்   மாயூரம்வேதநாயகம் பிள்ளை அவர்   படைத்த   முதல் நாவல் பிரதாபமுதலியார் சரித்திரம்.அதைத் தொடர்ந்து ராஜம் அய்யரின் கமலாம்பாள் சரித்திரம் மாதவையாவின் பத்மாவதி சரித்திரம் ஆகியவை நாவல் வளர்ச்சிக்கு வித்திட்டன. இன்று  வரை அழியாப்  புகழுடன் நின்று நிலவும் வரலாற்று நாவல்களைக் கற்பனை கலந்து படைத்து அளித்த கல்கி ரா.கிருஷ்ணமூர்த்தி
சரித்திர   நாவலாசிரியர்களின் முன்னோடியாக விளங்குகிறார். அகிலன், நா.பார்த்தசாரதி லஷ்மி, ஜெயகாந்தன் ஜெகசிற்பியன், சுஜாதா ஆகிய தமிழின் தலைசிறந்த நாவலாசிரியர்கள் தனித்தனி முறைகளைக் கையாண்டு மறக்க முடியாத புதினங்களை உருவாக்கினர். அவர்களைப் பின்பற்றி பல புதிய எழுத்தாளர்கள் காலந்தோறும் தோன்றிக் கொண்டே இருக்கின்றனர்.தமிழில் சிறுகதை இலக்கியத்தை ஜீவனுள்ள இயக்கமாகத் தொடங்கி வைத்தவர் சிறுகதை மன்னன் என்று புகழப்படும் புதுமைப்பித்தன் ஆவார். கு.ப.ரா, சி.சு.செல்லப்பா, தி.ஜானகிராமன், ராஜம்கிருஷ்ணன், ஜெயகாந்தன் ஆகியோரின் கைவண்ணத்தில் தமிழ்ச் சிறுகதை வளர்ச்சி பெற்றது; வளம் பெற்றது. ஆனால் தற்போதைய சூழலைப் பார்க்கும்போது சிறுகதை நாவல் போன்றவை அருகி வருவது போல் தோன்றுகிறது. அரசியல், மருத்துவம் விளையாட்டு,அறிவியல் போன்ற பல துறைகளிலும் வெளிவரும் கட்டுரைகளுக்கே செல்வாக்குப் பெருகி வரக் காண்கிறோம்.

ஏடுகள் வளர்த்த உரைநடை
                    செந்தமிழ், தமிழ்ப்பொழில், செந்தமிழ்ச் செல்வி போன்ற தமிழ் இலக்கிய ஏடுகள் செறிவுள்ள விடயங்களை உரைநடை   வாயிலாக வெளியிட்டு தமிழ் வளர்ச்சிக்குப் பெரும் தொண்டு ஆற்றியுள்ளன. ஆயினும் இந்த மாசிகைகள் கடினமான நடையில் இருந்ததால் புலமை   படைத்தவர்களால் மட்டுமே படிக்கப் பட்டன. பொது மக்களைச் சென்று அடையவில்லை. அதனால் தமிழ்நாடு, தினமணி போன்ற நாளிதழ்களும் கல்கி, ஆனந்தவிகடன், போன்ற இதழ்களும் எளிய தமிழில் உரைநடையை வளர்த்து மக்களின் படிக்கும் பழக்கத்தை விரிவுபடுத்தின. ஆனால் இன்று ஆங்கிலம் கலந்த தமிழே பெரும்பாலான ஏடுகளில் கையாளப்  படுவதை வேதனையுடன் காண வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

முடிவுரை
          மகாகவி பாரதியார், பாவேந்தர் பாரதிதாசன், கவிஞர் கண்ணதாசன் போன்றவர்கள் தங்கள் கவிதைகளால் புகழ்பெற்றவர்கள். இவர்கள் உரைநடை இலக்கியத்தை  வளர்ப்பதிலும் பெரும் பங்கு ஆற்றியுள்ளனர். சுதேசமித்திரன், இந்தியா ஏடுகளின் வாயிலாக பாரதி அருமையான அரசியல் கட்டுரைகளை
எழுதிக் குவித்தார். பாரதிதாசனின் தமிழ் இயக்கம் குறித்த கட்டுரைகள் தமிழிர் நெஞ்சில் உரம் ஊட்டின. கண்ணதாசன் திராவிட இயக்கத்தில் இருந்த போது தமிழ் மொழி பற்றியும் தமிழர் பெருமை குறித்தும் பல உணர்ச்சி ததும்பும் கட்டுரைகளைப் படைத்துள்ளார். பின்னாளில் அவர் ஆன்மீகத்தைப் பின்பற்றிய போது அர்த்தமுள்ள இந்து மதம் போன்ற ஆன்மீகக் கட்டுரைகளைத் தனக்கே உரித்தான தனி நடையில் எழுதியுள்ளார். பேரறிஞர் அண்ணா எழுத்துத்துறையில் தொடாத பொருள் இல்லை. தொட்டு துலங்காதது எதுவுமில்லை.தம்பிக்கு என்று அவர் எழுதிய  கடிதங்கள் சமூக சீர்த்திருத்த நாடகங்கள், திரைப்படங்கள் வாயிலாக தமிழ் உரைநடையை உச்சத் திற்குக் கொண்டு சென்றார். கருத்துக்களை எளிதில் சொல்வதற்கேற்ற சிறந்த கருவி உரைநடையே படிப்போரும் உரைநடையை எளிதில் புரிந்து கொள்வர் அதனால் உரை நடையே இன்று எம்மொழியிலும் செல்வாக்குப் பெற்றுத் திகழ்கிறது.
சிறந்த வசன நடை எழுதுவதற்கு இலக்கணம் பயன்பட மாட்டாது என ஒதுக்குதல் தவறு வசன நடையும் இலக்கணத்திற்கு உட்பட்டதே ஆகும்”.
என்பது எஸ்.வையாபுரிப் பிள்ளையின் கருத்து (தமிழின் மறுமலர்ச்சி பக் - 115)  இலக்கணத்திற்கு உட்பட்ட சிறந்த உரைநடையைக் கையாள டாக்டர் மு.வ, டாக்டர்.சி.பா, போன்ற தமிழறிஞர்களின் கட்டுரைகளை முன்னோடியாகக் கொள்ள வேண்டும். எம்மொழியாம் செம்மொழித் தமிழில் உரைநடை இலக்கியம் துறை தோறும்   துறைதோறும்  வளர்ந்து புதுவகை நூல்களை உருவாக்கும் என்பதில் அய்யமில்லை.

Tuesday, June 16, 2015

சென்னை 38-வது புத்தக கண்காட்சியில் 18-01-2015 அன்று நடைபெற்ற மணிமேகலைப் பிரசுர நூல்கள் வெளியீட்டு விழாவில் “தமிழை வளர்த்த முக்கியத் தமிழ் அறிஞர்கள் நூல் வெளியிடும் நிகழ்ச்சியின் புகைப்படங்கள்.



Thursday, February 12, 2015

தமிழில் பயண இலக்கியம்



முன்னுரை
        தமிழுக்குப் பயண இலக்கியம் என்பது புதுவரவு அன்று. சங்க காலம் தொட்டே பயணம் பற்றிய குறிப்புகளும்,செய்திகளும் தமிழ் இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளன. காப்பியங்களிலும்  பல்வேறு  பயணங்கள்  விவரிக்கப் பட்டுள்ளன. பண்டைக்  காலத்திலேயே தமிழரின் கடற்பயணம் தொடங்கி விட்டது. வெளிநாடுகளுடன் கொண்ட வணிகத் தொடர்பால் கடல் வழியாக கலங்களில் ஏறி  பிற நாடுகளுக்குச் சென்று வணிகம் செய்யவும் அந்நாடு களிலிருந்து   கடல்  வழியே  வரும் பொருட்களை வாங்கிச் சேமிக்கவும் தமிழகக்  கடற்கரைகளில்  பெரியதும் சிறியதுமாக பல துறைமுகங்கள் அமைக்கப்பட்டன. தரை வழியாகவும்  கடல் வழியாகவும் பயணம் மேற் கொண்ட தமிழர்கள் பின்னாளில் வானவூர்தி வாயிலாகப் பயணத்தைத் தொடர்ந்தனர்.ஒவ்வொரு காலகட்டத்திலும் தாங்கள் மேற்கொண்ட பயண அனுபவங்களைப் பிறருடன் பகிர்ந்து கொள்ள விரும்பி அவற்றைப் பதிவு செய்யத் தவறவில்லை.துவக்க காலத்தில் தங்கள் எண்ணங்களை ஏட்டில் எழுதி வைத்தனர்.
            அச்சிடும் முறை வழக்கத்திற்கு வந்த பின் அந்த அனுபவங்கள் நூல்களாக வெளியிடப்பட்டன. சங்ககாலம் தொடங்கி இன்று வரை தமிழில் பயண இலக்கியம் வளர்ந்த வரலாற்றைச் சுருக்கமாகக் காண்போம். இக்கட்டுரை வாயிலாகப் பயண வரலாற்றில் ஏற்பட்டுள்ள நவீன உத்தி களையும் மாற்றங்களையும் அறிந்திடச் செய்வதே இந்த முயற்சியின் நோக்கம்.



சங்க இலக்கியத்தில் பயணச் செய்திகள்
                           தமிழ் இலக்கியம், சங்க கால இலக்கியம் ,இடைக்கால இலக்கியம், பிற்கால இலக்கியம் என மூவகைப்படும்.அச்சங்க காலத்தில் இயற்றப்பட்ட இலக்கிய நூல்களும் பலவாகும் என்பது  தொல்காப்பியம் என்னும் பேரிலக்கணத்தாலும் அதன் உரைகளாலும், சிலப்பதிகாரம் யாப்பருங்கலம், இறையனார்களவியல் ஆகியவற்றின் உரைகளாலும் அறியப்படும்  தொல்காப்பியர் காலத்தில் பயணம் என்ற சொல் வழங்கப்படவில்லை. “செலவு” என்ற சொல்லே பயணத்தைக் குறிக்கும் சொல்லாக வழக்கத்தில் இருந்தது.
               “செலவினும் வரவினுந் தரவினுங் கொடையினு
                நிலை பெறத் தோன்று மந்நாற் சொல்லுந்
                தன்மை முன்னிலை படர்க்கை யென்று
                அம்மூவிடத்து முரிய வென்ப”
இந்நூற்பாவில் செலவு என்பது பயணம் என்ற பொருளில் வந்துள்ளது.
                    
                     சங்க காலத் தமிழ் மக்களின் வாழ்க்கையை அறிந்து கொள்ளப்  பத்துப்பாட்டு இலக்கியத்தைப் பயின்றால் போதும். “பத்துப்பாட்டு கற்பனைகளும், கதைகளும் நிறைந்த காவியமன்று.கண்ணால் கண்ட காட்சி களை அப்படியே அழகாக எழுதியிருக்கும் சொல்லோவியமாகும்.”  என்று தமழறிஞர் சாமி சிதம்பரனார் குறிப்பிடுகிறார். பத்துப்பாட்டில் ஐந்து பாடல்கள் ஆற்றுப்படை இலக்கியங்கள். பரிசு பெற்று வந்த ஒருவன் பரிசு பெற நாடிச் செல்லும் மற்றொருவனுக்கு வழி சொல்லி அனுப்புவது ஆற்றுப்படையாகும். புலவராற்றுப்படை என்னும் திருமுருகாற்றுப்படையில் மந்திகள் கூட அணுக முடியாத உயர்ந்த மரங்கள் நிறைந்த மலைகளில் வண்டுகள் கூட மொய்க்க இயலாத காந்தள் மலர்களைப் பறித்து மாலையாகத் தலையில் அணிந்துள்ள முருகப் பெருமானை வருணிக்கும் புலவர் நக்கீரனார் இயற்கையோடு இயைந்த மலைகளையும், மரங்களையும், மலர்களையும் நேரில் சென்று கண்டு எழுதியுள்ளார்.
                 “மந்தியும் அறியா மரன் பயில் அடுக்கத்து
                   சுரும்பும் மூசாச் சுடர்ப்பூங் காந்தள்
                   பெருந் தண் கண்ணி மிலைந்த சென்னியன்

           இப்படிப் பல அழகிய காட்சிகளைக் காண்பதற்காகப் புலவர்கள் நாட்டில் மூலை முடுக்கெல்லாம் பயணம் செய்துள்ளனர் என்பதைச் சங்க இலக்கியமும் பின்னர் வந்த இலக்கியங்களும் நமக்குக் காட்டுகின்றன.

                சிறுபாணாற்றுப்படையில் சேர, சோழ, பாண்டிய நாடுகளும் அவற்றின் தலைநகரங்களும் பற்றிய செய்திகளோடு ஓய்மா நாட்டுக் கடற் கரை, முல்லை நிலம் பற்றிய செய்திகளும், எயிற்பட்டினம், வேலூர், ஆமூர், கிடங்கில்,மாவிலங்கை ஆகிய ஊர்கள் பற்றிய விவரங்களும் கூறப் பட்டுள்ளன.
            பெரும்பாணாற்றுப்படையில் வறிய பெரும்பாணன் காஞ்சி நோக்கி புறப்படும் இடத்திலிருந்து தொண்டை நாட்டுக் கடற்கரைப் பட்டினத்திற்குச் செல்லும் வழி, அங்கிருந்து காஞ்சிக்குச் செல்லும் வழி இவ்விரு வழிகளிலும் உள்ள நில அமைப்புப் பெருவழிகள் பல வகை நிலங்களிலும் வாழும் மக்களின் உணவு, உடை, உறையுள், தொழில்கள்\, உள்நாட்டுவாணிகம், கடல்வாணிகம் இன்னபிறவும் இடம்பெற்றுள்ளன.அதைப் போலவே சங்க காலப் பாண்டிநாட்டையும் அதன் தலைநகரான மதுரை யையும் மக்கள் வாழ்க்கையையும் படம்பிடித்துக் காட்டுகிறது மதுரைக் காஞ்சி என்னும் பத்துப்பாட்டு நூல்.
   
                பல்வேறு சங்கப் புலவர்கள் பல்வேறு காலகட்டங்களில் பாடி வைத்த தனிப் பாடல்கள் திணை வாரியாகவும், துறை வாரியாகவும், பொருள் அடிப்படையிலும்  எட்டுத்தொகை நூல்களாகத்  தொகுக்கப்பட்டுள்ளன. இந்தப் பாடல்களை யாத்த புலவர்கள் நாடெங்கும் சுற்றித் திரிந்து தாம் கண்ட காட்சி களையும், அறிந்த செய்திகளையும் சிறந்த செய்யுட்களாகப் பதிவு செய்து உள்ளனர். இதற்காக அவர்கள் மேற்கொண்ட பயணங்களில் பெற்ற அனுபவங்களின் வெளிப்பாடுகளே இந்த உன்னதப் பாடல்கள்.
   “சுள்ளிஅம் பேரியாற்று வெண்நுரை கலங்க,
                  யவனர் தந்த வினை மாண் நன் கலம்
                  பொன்னொடு வந்து கறியொடு பெயரும்
                  வளம் கெழு முசிறி”
யவனர் கொண்டு வந்த நல்ல மரக்கலம் பொன்னுடன் வந்து மிளகுடனே மீண்டு செல்லும் இத்தகைய வளம் வாய்ந்தது முசிறி என்ற பட்டினம். இது போன்று பல புலவர்கள் தங்கள் பாடல்களில் பதிவு செய்துள்ள பயணக் குறிப்புகளிலிருந்து பல வரலாற்றுச் செய்திகளை நாம் அறிந்து கொள்ள முடிகிறது.

காப்பியங்களில் பயணக் குறிப்புகள்
      பயண இலக்கிய வரலாற்றில் அடுத்துத் தடம் பதித்தவை காப்பியங்கள்  எனலாம். தமிழில் உள்ள ஐம்பெருங்காப்பியங்களில் முழுமையாகக் கிடைத் துள்ள சிலப்பதிகாரம், மணிமேகலை, சீவகசிந்தாமணி ஆகிய காப்பியங்களில் காப்பியத் தலைவன் வணிகம், போர் தூது ஆகிய காரணங்களுக்காகவும் பல இடங்களைச் சுற்றிப் பார்க்க வேண்டுமென்ற ஆர்வத்தினாலும் பயணம் மேற் கொள்கிறான். சிலப்பதிகாரக்கதை புகாரில் தொடங்கி மதுரையில் நடந்து வஞ்சியில் முடிகிறது. புகார்க் காண்டத்தில் காவிரிப் பூம்பட்டினத்தின் ஒவ்வொரு பகுதியையும் ஒரு சுற்றுலா வழிகாட்டியைப் போல் நமக்கு விளக்கிக் காட்டும் இளங்கோவடிகள் நாடுகாண் காதையில் கவுந்தியடிகள் வாயிலாக சோழ நாட்டுப் பகுதிகளையும், காடுகாண் காதையில் மாங்காட்டு மறையோன் வாயிலாக மதுரை செல்லும் வழிகளையும் விரிவாக விளக்கிக் கூறுகிறார்.
           மணிமேகலைக் காப்பியத்தில் சாவகத் தீவில் உணவின்றி மக்கள் இறந்ததால் அவர்களின் பசிப்பிணியைப் போக்குவதற்காக அமுதசுரபியுடன் ஆபுத்திரன் சாவகத் தீவிற்குச் சென்றான் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

          சீவகசிந்தாமணிக் காப்பியத்தின் நாயகனான சீவகன் பல்வேறு இடங்களுக்குத் தரைவழியாகவும் வான்வழியாகவும் சென்று வருகிறான். தமிழ்க் காப்பியங்களில் பெருங்காப்பியமாக விளங்கும் கம்பராமாயணத்தில் இராமாயணக்கதை நடைபெறும் இடங்களையும், மலைகளையும் ஆறு களையும்  தமிழ்நாட்டு  இடங்கள், மலைகள் ,ஆறுகள் இவற்றோடு
ஒப்பிட்டுப் பாடுகிறார் கம்பர்.
     “பூவிரி பொலன் கழல், பொரு இல் தானையான்,
                காவிரி நாடு அன்ன கழனி நாடு ஒரீஇ,
                தாவர சங்கமம் என்னும் தன்மைய
                யாவையும் இரங்கிட, கங்கை எய்தினான்”

தற்காலப் பயண இலக்கியங்கள்
                        வெளியூர் அல்லது வெளிநாடு சென்று வந்த பயண அனுபவங்களைச் சுவையுடன்  எழுதி அவற்றைப் படிப்போர் அப்பயணத்தைத் தாமே அனுபவித்தாற் போன்ற மகிழ்ச்சியையும், அனுபவத்தையும் பொது அறிவையும் பெறும்படி செய்வது பயணக் கட்டுரையின் நோக்கமாகும்.
“செங்கோன் தரைச்செலவு” தமிழில் பயண இலக்கியத்திற்கு முன்னோடியான நூல் என்று கருதப்படுகிறது. அடுத்து  “தகடூர்யாத்திரை” என்றொரு பயண நூல் இருந்ததாகத் தெரிகிறது. \
        தமிழ்த்தென்றல் திரு.வி.க எழுதியுள்ள இலங்கைச் செலவு என்ற கட்டுரையும் டாக்டர் மு.வவின்  பயண அனுபவங்களை விளக்கும் “யான் கண்ட இலங்கை”என்ற நூலும் தற்காலப் பயண இலக்கியங்கள் உருவாகப் பாதை அமைத்தவை என்று கூறினால் அது மிகையாகாது.
    பயண இலக்கியத்தின் தந்தை எனவும் உலகம் சுற்றிய தமிழன் எனவும் போற்றப்படும் ஏ.கே.செட்டியார் 1850 முதல் 1965 வரை வெளியான பயணக் கட்டுரைகளைத் தொகுத்து “தமிழ்நாடு பயணக் கட்டுரைகள்” என்ற நூலாக வெளியிட்டார். 19 –ஆம் நூற்றாண்டின் இறுதியில் தமிழின் முதல் பயண நூல் வெளியானது. இந்நூலின் தலைப்பு “இந்திய திவ்ய தேச யாத்திரை” ஆகும். இதனை வெளியிட்டவர் சேலம் பகடலு நரசிம்மலு நாயுடு. 1941 –இல் ஏ.எஸ்.பஞ்சாபகேச ஐயர் தமது மேல்நாட்டுப் பயண அனுபவங்களை இந்தியாவின் மேல் நாட்டு அனுபவங்கள் என்ற தலைப்பில் நூலாக வெளியிட்டார். 1942 –இல் பிரயாண நினைவுகள் என்ற நூலையும் 1943 –இல் பிரயாணம் செய்யுங்கள்  என்ற   நூலையும்  எழுதி  வெளியிட்டார் ஏ.கே.செட்டியார். அமரர் கல்கி இலங்கைக்குப் பயணம் செய்து தமது அனுபங்களை ஆனந்தவிகடன் இதழில் தொடராக வெளியிட்டார். அவருக்குப் பின் தேவன் “ஐந்து நாடுகளில் அறுபது நாட்கள்  என்று தமது பயண அனுபங்களை வாசகர்களுடன் பகிர்ந்து கொண்டார். மீ.ப.சோமு தமது இங்கிலாந்துப் பயண அனுபவங்களை “அக்கரைச் சீமையில்ஆறு மாதம்” என்ற தலைப்பில் கல்கி வார இதழில் தொடராக எழுதினார். பின்னர் அது நூலாக வெளிவந்தது.
1966 –இல் வாசகர் வட்டம் பதினொரு ஆசிரியர்கள் எழுதிய பயணக் கட்டுரைகளின் தொகுப்பை “பிரயாண இலக்கியம்” என்ற தலைப்பில் வெளியிட்டது. ஏ.கே.செட்டியாருக்கு முன் பலர் வெளிநாடுகளுக்குச் சென்றிருந்தாலும் அவர்களுக்கும் ஏ.கே.செட்டியாருக்கும் ஒரு வேறுபாடு உண்டு. ஏ.கே.செட்டியார் தமிழன் என்ற கண்ணோட்டத்துடன் பல நாடுகளையும் பார்த்தார் என்ற கருத்து குறிப்படத்தக்கது. அவர் எழுதிய சிறந்த பயண நூல்கள் வருமாறு:
1.   தமிழ்நாடு பயணக் கட்டுரைகள்
2.   உலகம் சுற்றிய தமிழன்
3.   பிரயாண நினைவுகள்
4.   மலாயா முதல் கனடா வரை
5.   கரீபியன் கடலும் கயானாவும்
6.   அமெரிக்க நாட்டிலே
7.   அண்ணல் அடிச்சுவட்டில்

தி.ஜானகிராமன் எழுதிய “கருங்கடலும் கலைக்கடலும்” சுஜாதாவின்
“60 அமெரிக்க நாட்கள்” லேனாதமிழ்வாணனின் “தமிழைத் தேடி ஒரு பயணம்”, “ஒரு பத்திரிகையாளனின் மேலை நாட்டுப் பயண அனுபவங்கள்”, “ஒரு பத்திரிகையாளனின் கீழை நாட்டுப் பயண அனுபங்கள்,” “துபாய் அழைக்கிறது”, “கண்ணுக்குள் நிற்கும் கங்காரு நாடு” முதலிய பயண நூல்கள்  பெரியவர் முதல் சிறுவர்கள் வரை அனைவரும் விரும்பிப் படிக்கும் வகையில் சுவைபட எழுதப் பட்டுள்ளன. அவர் தமது பயணத்தில் படிக்கும் வாசகர்களையும் உடன் அழைத்துச் செல்வது போன்ற எண்ணத்தை உருவாக்கி விடுகிறார். மணியணின் இதயம் பேசுகிறது பயணக் கட்டுரைகள் தமிழ் மக்களால் விரும்பிப் படிக்கப்பட்டவை.

முடிவுரை
       பயண இலக்கியம் என்ற துறை  தமிழுக்குப் புதியதன்று. பயண இலக்கியம் என்ற பொருளில் ஆனால் வேறு பெயர்களில் தமிழ் மொழியில் நூல்கள் உள்ளன என்று பார்த்தோம். ஆற்றுப்படை, வழிநடைச் சிந்து ஆகியவை இவ்வகைப்பாட்டில் அடங்கும். 19 , 20 நூற்றாண்டுகளைப் பயண இலக்கியத்தின் பொற்காலம் என்று கூறலாம்.
 1988 முதல் 2008 வரையிலான காலப் பகுதியில் தமிழில் ஏறத்தாழ 600 பயண நூல்கள் வெளிவந்துள்ளன. பயண இலக்கியங்கள்  மூலம் ஒரு இடத்தின் புவியியல் அமைப்பு, மக்களின் வாழ்வியல், பண்பாடு, நாகரீகம், நம்பிக்கைகள், விழாக்கள் போன்றவற்றைப் பற்றி அறிந்து கொள்ளலாம். அவை பயண வழிகாட்டிகளாகவும் விளங்குகின்றன. பயண இலக்கியங்கள் மக்களை மிகவும் கவர்ந்துள்ளதால் தமிழ்நாட்டுப் பத்திரிகைகள் பயணக் கட்டுரையை வரவேற்று வெளியிடுகின்றன. இணையத்திலும் பயண இலக்கியம் குறித்த ஆய்வுக் கட்டுரைகள் பெருமளவில் எழுதப்படுகின்றன. அவற்றை விரும்பிப் படிக்கும் வாசகர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இவையெல்லாம் பயண இலக்கியத்திற்கு ஒளி மிகுந்த எதிர்காலம் உண்டு என்பதை நிறுவுகின்றன.    


 

Tuesday, December 16, 2014

உணவுப் பாதுகாப்புச் சட்டம் குறித்த விரிவான விளக்கம்


தனியொருவனுக்கு உணவியில்லையெனில் ஜெகத்தினை அழித்திடுவோம்  என்று சூளுரைத்த மகாகவி பாரதியின் கனவை நனவாக்க வந்துள்ள உணவுப் பாதுகாப்புச் சட்டம் உருவான வரலாறு தொடங்கி அதில் அடங்கியுள்ள அனைத்து அம்சங்களையும் அலசி ஆராய்வதுடன் உணவுப் பாதுகாப்புச் சட்டம் முழுவதையும் எல்லோரும் புரிந்துகொள்ளும் வண்ணம் எளிய நடையில் தெளிவுற விளக்குகிறது இந்த நூல். உணவுப் பாதுகாப்புச் சட்டம் பற்றி வெளிவந்துள்ள முதல் நூல் என்ற சிறப்பும் இந்த நூலுக்கு உண்டு.

Wednesday, March 12, 2014

லேனா தமிழ்வாணனின் பயணக் கட்டுரைகள் ஒரு பார்வை






பயண இலக்கியத்தின்  தோற்றமும் வளர்ச்சியும் விரிவாக விளக்கப்பட்டிருப்பதுடன் மொரிஷியஸ்,சிஷெல்ஸ், தென்னாப்பிரிக்கா கென்யா ஆகிய நாடுகளில் நிலவும் தமிழர்களின் வாழ்க்கை முறையையும் அங்கு தமிழ் மொழியின் நிலையையும் அறிந்து வர "தமிழைத்தேடி ஒரு பயணம்" மேற்கொண்ட திரு.லேனாதமிழ்வாணனின் கட்டுரையை இந்நூல் ஆய்வு செய்கிறது.